உள்ளூர் செய்திகள்
புதுவையில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் நேற்று 4801 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 1897 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. புதுவையில் 1395 பேரும்,, காரைக்காலில் 342 பேரும், ஏனாமில் 116 பேரும், மாகியில் 44 பேரும் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 51 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 13 பேரும், அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 26 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 15 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் 174 பேர், வீட்டு தனிமையில் 15,522 பேர் என ஒட்டு மொத்தமாக 15,896 பேர் சிகிச்சையில் உள்ளனர். 22-ந் தேதி 1264 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 52 அயிரத்து 213 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 611 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையே புதுவை தட்டாஞ்சாவடியை சேர்ந்த 55 வயது பெண், ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த 89 வயது முதியவர், வில்லியனூர் புதுநகரை சேர்ந்த 80 வயது முதியவர், வைத்திக்குப்பத்தை சேர்ந்த 65 வயது முதியவர், மோந்த்ரேஸ் வீதியை சேர்ந்த 90 வயது முதியவர் என 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1906 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.