உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் முழு ஊரடங்கு: புதுவையில் சுற்றுலா தொழில்கள் முடக்கம்
தமிழகத்தில் முழு ஊரடங்கால் புதுவையில் சுற்றுலா தொழில்கள் முடக்கி போனதால்வருவாய் பாதிக்கப்பட்டது.-
புதுச்சேரி:
உலகம் முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
2-வது அலைக்கு பிறகு கொரோனா படிப்படியாக குறைந்து தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை அடைந்தது.
இதன்பின் மீண்டும் சுற்றுலா தொழில்கள் புத்துயிர் பெற்றது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதித்ததால் புதுவையில் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
புத்தாண்டுக்கு பிறகு 3-வது அலை பாதிப்பு தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்
பாடுகள் விதித்துள்ளனர்.
புதுவையை பொறுத்தவரை வார இறுதிநாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையில் கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிவர். அந்த நாட்களில் நகரின் பிரதான வீதிகளில் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுடு ஏரி, கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா, பாரதி பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருப்பர். வார இறுதிநாட்களில் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழியும்.
நகர பகுதியில் உள்ள ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் குவிவர். இவர்கள் மூலம் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவது, வீடுகளில் தங்க வைப்பது என பல்வேறு தொழில்கள் நடைபெறும்.
கடந்த 3 வாரமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்துவிட்டது.
தமிழக பகுதிகளை தாண்டித்தான் புதுவைக்கு வரவேண்டும். அதோடு மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்ப முடியாது.
இதனால் நோணாங் குப்பம் படகு குழாம் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடியது. புதுவை நகர பகுதியில் பயணிகள் நடமாட்டம் அதிகமாக இல்லை.
மாநில எல்லைகளில் போலீசார் பேரிகார்டுகளை வைத்து
தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் புதுவையில் சுற்றுலாவை நம்பியுள்ள தொழில்கள் முடங்கிப்போயுள்ளது. வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது.