உள்ளூர் செய்திகள்
தேசிய அளவிலான குத்து சண்டை போட்டி: கென்னடி எம்.எல்.ஏ. பரிசு கோப்பை வழங்கினார்
தேசிய அளவிலான குத்து சண்டை போட்டியில் புதுவை வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
புதுச்சேரி:
தேசிய அளவிலான குத்து சண்டை (ஹப்கிடோ பாக்சிங்) சாம்பியன்ஷிப் போட்டிகள் புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
அகில இந்திய நடுவர் குழு சேர்மன் வளவன் தலைமை தாங்கினார். ஆசிய சங்க பொதுச்செயலாளர் ராஜ்ஹடேகர், இந்திய ஹப்கிடோ சங்க தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் சந்தோஷ் வரவேற்றார்.
புதுவை சாய் மைய இயக்குனர் முத்து கேசவலு, மாநில விளையாட்டு கவுன்சில் நிர்வாக அதிகாரி சண்முகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா, தெலுங்கானா, சட்டீஷ்கர், கோவா, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 400&க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் தனிப்பட்ட முறையில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை புதுவை வீரரான கணேஷ் வென்றார். புள்ளிகள் அடிப்படையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை முதல் இடத்தை மகாராஷ்டிராவும், 2-ம் இடத்தை கர்நாடகாவும், 3-ம் இடத்தை தமிழ்நாடும் பெற்றது.
இதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கினார்.