உள்ளூர் செய்திகள்
கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் மர்ம சாவு
கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை அய்யங்குட்டிபாளையம் அமைதிநகர் 3-வது குறுக்கு தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சுராமணிதிவாரி (வயது 62). இவர் குரும்பாபேட் அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி மற்றும் மகன் வெளிமாநிலங்களில் உள்ளனர். அவ்வப்போது சுராமணிதிவாரியை அவரது மகன் பார்த்துவிட்டு செல்வார். சுராமணிதிவாரி பொருட்கள் வாங்க குரும்பாபேட்டில் உள்ள மாணிக்கம் என்பவர் கடைக்கு வரும்போது அவருக்கு பழக்கமானார்.
அதன் மூலம் சுராமணிதிவாரியின் மகன் அடிக்கடி மாணிக்கத்துக்கு போன் செய்து தனது தந்தையின் உடல்நலம் குறித்து விசாரிப்பார்.
இந்த நிலையில் நேற்று மாலை சுராமணிதிவாரிக்கு அவர் மகன் போன் செய்தார். ஆனால் போனை எடுத்து பேசாததால் சந்தேகமடைந்த சுராமணிதிவாரி மகன் மாணிக்கத்துக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.
இதையடுத்து சுராமணி திவாரி தங்கியிருந்த வீட்டுக்கு மாணிக்கம் சென்றார். அங்கு வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் மாணிக்கம் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சுராமணிதிவாரி தரையில் குப்புறபடுத்த நிலையில் உடல் அழுகி இறந்து காணப்பட்டார். அவர் 3 நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணிக்கம் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். மேலும் சுராமணிதிவாரியின் மகனுக்கும் இதுபற்றி தகவல் தெரிவித்தார். போலீசார் சுராமணிதிவாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் மர்மான முறையில் இறந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.