கோவை அருகே லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் உடல் நசுங்கி பலி
கோவை:
கோவை மதுக்கரை அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி சவிதா (வயது 40). டைபிஸ்ட்டாக வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை இவர் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். மொபட் மதுக்கரை ரோட்டில் சென்றபோது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி மொபட் மீது உரசியுள்ளது. இதில் சவிதா நிலைதடுமாறி மொபட்டில் இருந்து நடுரோட்டில் விழுந்தார்.
அப்போது லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.
இதில் சவிதா சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவல் அறிந்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான சவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.