செய்திகள்
கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்ற தொழிலாளி கைது
கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி ஏரிக்கரை அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பாப்பாரப்பட்டி ரெயில்வே காலனியை சேர்ந்த தொழிலாளி பெரியண்ணன் (வயது 32) என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரிந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.73 ஆயிரம் மதிப்புள்ள 7 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் ரூ.900 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பெரியண்ணனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.