செய்திகள்
அரிவாள் வெட்டு

திருமானூர் அருகே சித்தப்பாவுக்கு அரிவாள் வெட்டு- வாலிபர் கைது

Published On 2021-09-19 10:52 GMT   |   Update On 2021-09-19 10:52 GMT
திருமானூர் அருகே சித்தப்பாவுக்கு அரிவாள் வெட்டு நடந்த சம்பவம் தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம்(வயது 50). இவரது அண்ணன் கிறிஸ்துராஜின் மகன் பிரதீப் அந்தோணிராஜ்(25). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தினர் பேசிக்கொண்டிருந்தபோது ஆபிரகாம், பிரதீப் அந்தோணிராஜின் மனைவியிடம் பெரியவர்களிடம் மரியாதையாக பேச மாட்டாயா என்று கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் அந்தோணிராஜ் நேற்று, ஆபிரகாமை அரிவாளால் வெட்டியுள்ளார். அதை ஆபிரகாம் தடுத்தபோது அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆபிரகாமை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப் அந்தோணிராஜை கைது செய்து, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News