செய்திகள்
கோப்புபடம்

மீன்சுருட்டி அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தற்கொலை

Published On 2021-09-16 11:35 GMT   |   Update On 2021-09-16 11:35 GMT
மீன்சுருட்டி அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கீழ செங்கல்மேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி பவானி. இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அவா்களில் இரண்டாவது மகளான துர்க்காதேவிக்கும்(வயது 26), ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் அன்பரசனுக்கும்(30) கடந்த 8-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

கடந்த 10-ந் தேதி மகளும், மருமகனும், மறு வீடு விருந்துக்கு வந்திருந்தனர். அப்போது துர்காதேவிக்கு மாதவிடாய் காரணமாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர், சோர்வாக காணப்பட்டார். இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி இரவு எல்லோரும் சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை நேரத்தில் மரத்தில் மாடு கட்டுவதற்காக வைத்திருந்த கயிற்றால் துர்க்காதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கருப்பையன் கொடுத்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் மற்றும் மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துர்க்காதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வயிற்று வலி காரணமாக துர்க்காதேவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News