செய்திகள்
வீராம்பட்டினத்தில் மீனவரை தாக்கி கொலை மிரட்டல்
அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினத்தில் மீனவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது48). மீனவர். இவர் சம்பவத்தன்று தனது நண்பர் அப்புவுடன் துறைமுக மீன்பிடி பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அப்புவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனை முனியப்பன் தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சரவணன் முனியப்பனை ஆபாசமாக திட்டி கையிலிருந்த இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
பின்னர் தாக்குதலில் காயமடைந்த முனியப்பன் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து அவர் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.