காரைக்குடியில் மீன் கடை வைப்பதில் மோதல்- வாலிபர் குத்திக்கொலை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 29). இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்துமணி (26) என்பவருக்கும் இடையே காரைக்குடி வாரச்சந்தையில் மீன் கடை வைப்பதில் தகராறு இருந்து வந்தது.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வாரச்சந்தை கூடுவது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தையில் இவர்களுக்குள் மீண்டும் மீன் கடை வைப்பதில் தகராறு மூண்டது.
இந்த நிலையில் நேற்று இரவு திருச்செல்வமும், முத்துமணியும் வாரச்சந்தை பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த 2 பேரும் ஒருவருக்கொருவர் கத்தியால் மாறி மாறி குத்திக் கொண்டனர்.
இதில் படுகாயம் அடைந்த திருச்செல்வம் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். முத்துமணிக்கும் உடலில் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இன்று காலை அங்கு வந்த பொதுமக்கள் திருச்செல்வம் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அவர்கள் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மற்றும் போலீசார் அங்கு சென்று திருச்செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முத்துமணியை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.