செய்திகள்
மானாமதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா- வீட்டுக்கு சீல் வைப்பு
மானாமதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் வீடு சீல் வைக்கப்பட்டது.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் மானாமதுரை பகுதியில் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் மானாமதுரையில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கொரோனா பாதித்த 6 பேர் வசித்த வீட்டை சுற்றிலும் சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்தனர். அந்த வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
அதோடு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கியும், கொரோனா விழிப்புணர்வையும் பேரூராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தங்கத்துரை தலைமையில் ஊழியர்கள் எடுத்துரைத்தனர். தொடர்ந்து அந்த பகுதி மக்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.