செய்திகள்
கலெக்டர் கண்ணன்

விருதுநகரில் 100 சதவீத வாக்குப்பதிவு தொடர்பான புகைப்பட கண்காட்சி - கலெக்டர் கண்ணன் திறந்து வைத்தார்

Published On 2021-03-30 23:39 IST   |   Update On 2021-03-30 23:39:00 IST
புகைப்பட கண்காட்சியில் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி வாக்காளர்களை கவரும் வகையில் நாள்தோறும் பல்வேறு அரசுத் துறையின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று தேசபந்து மைதானத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்பாக வடிவமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியினை கலெக்டர் கண்ணன் திறந்து வைத்தார்.

இந்த புகைப்பட கண்காட்சியில் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது.

தேர்தலில் வாக்களிப்பதன்அவசியம் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட சவால் சக்கரம் விளையாட்டினை மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார்.

இந்த சவால் சக்கரத்தில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களுக்கும் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ப பரிசுகள் வழங்கப்பட்டன. விளையாட்டில் பங்கு பெற்றவர்களுக்கு மதிப்பெண்களுக்கு ஏற்ப வாக்காளர் விழிப்புணர்வு டி சார்ட், தொப்பி உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.

முன்னதாக 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி போடப்பட்டிருந்த ரங்கோலி கோலத்தினையும் இதுவரை மாவட்டத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டதையும் மகளிர் திட்டத்தினால் அமைக்கப்பட்ட காய்கறி கண்காட்சியினையும் கலெக்டர் பார்வையிட்டார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News