செய்திகள்
முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.44 லட்சம் மோசடி செய்ததாக தந்தை- மகன் மீது வழக்கு
சிவகாசி அருகே முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.44 லட்சம் மோசடி செய்ததாக தந்தை- மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகாசி:
திருத்தங்கல் அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது45). முன்னாள் ராணுவ வீரரான இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், அவரது மகன் சீனிவாசன் ஆகியோர் ரூ.44 லட்சத்தை பல்வேறு தவணைகளில் வாங்கியதாக தெரிகிறது. பணத்தை பெற்றவர்கள் ஒரு வருடத்திற்குள் திருப்பி தருவதாக கூறி விட்டு பின்னர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து முன்னாள் ராணுவவீரர் ரமேஷ், சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், முன்னாள் ராணுவவீரர் ரமேஷின் புகார் மனுவின் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதை தொடர்ந்து திருத்தங்கல் போலீசார் ராதாகிருஷ்ணன், சீனிவாசன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.