செய்திகள்
காலாப்பட்டில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
காலாப்பட்டில் நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காலாப்பட்டு:
பெரியகாலாப்பட்டு எத்தாசிவில் வீதியை சேர்ந்தவர் தயாளன். இவரது மனைவி அஞ்சலாட்சி (வயது 50). இவர் வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மகன் பாலமுருகன், பெரியகாலாப்பட்டில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அஞ்சலாட்சி காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அஞ்சலாட்சி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அஞ்சலாட்சி வரும் வழியிலேயே பறிதாபமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது மகன் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.