செய்திகள்
மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி கிடக்கும் காரைபடத்தில் காணலாம்.

மரத்தில் கார் மோதி விபத்து- சென்னை தொழிலதிபர்கள் 2 பேர் பலி

Published On 2021-02-26 19:05 GMT   |   Update On 2021-02-26 19:05 GMT
மதுராந்தகம் அருகே அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், சென்னையை சேர்ந்த தொழிலதிபர்கள் 2 பேர் பலியாகினர்.
மதுராந்தகம்:

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 59). இவர் தனது தொழில் நண்பர்களான சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வின்சென்ட் பாபு (55), நுங்கம்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணன் (64), பெரம்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (51) ஆகிய 3 பேருடன் கோயம்புத்தூருக்கு தொழில் சம்பந்தமாக காரில் சென்றார்.

இந்த நிலையில் அனைவரும் கோவை சென்று வேலையை முடித்துக்கொண்டு நேற்று இரவு சென்னைக்கு திரும்பி கொண்டு இருந்தனர். வின்சென்ட் பாபு காரை ஓட்டினார். நேற்று அதிகாலை 4 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் அருகே கார் வந்தபோது பனி மூட்டம் காரணமாக காரை ஓட்டி வந்த வின்சென்ட் நிலைத்தடுமாறினார்.

இதையடுத்து, கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி அங்குள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 4 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

அப்போது அதிகாலை என்பதால் பனிமூட்டத்தில் பள்ளத்தில் கிடந்த காரினை வாகன ஓட்டிகள் யாரும் கவனிக்கவில்லை. இதனால், காயமடைந்தவர்களை காப்பாற்ற யாருமில்லாமல் அய்யோ, அம்மா... என்று வலியில் கதறினர். இதனால் பலத்த காயமடைந்த சண்முகசுந்தரம், வின்சென்ட் பாபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், ஆகியோர் படுகாயத்தால் மயங்கி கிடந்தனர். இதையடுத்து வெகுநேரமான பின்னர் அப்பகுதியில் வந்தவர்கள் படுகாயமடைந்த கிடந்த 2 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் டெல்லி பாபு ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News