செய்திகள்
புதுவை அருகே நாட்டு மருந்து கடையில் பணம் திருட்டு
புதுவை அருகே நாட்டு மருந்து கடையில் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை திலகர் நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 41). இவர் திலகர் நகர் மெயின்ரோட்டில் நாட்டு மருந்து கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் இவர் தனது 2 மகன்களிடமும் கடையை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு வெளியே சென்றார். அப்போது கடைக்கு வந்த 2 வாலிபர்கள், அப்பா எங்கே? என்று சிறுவர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் வெளியில் சென்று உள்ளார் என்று செல்போனில் விளையாடிக்கொண்டே கூறியுள்ளனர்.
அதன்பின் சிறிதுநேரம் கழித்து கடைக்கு வந்த பாலாஜி கல்லாவை திறந்து பார்த்தபோது, இதில் வைத்திருந்த ரூ.29 ஆயிரம் மாயமாகி இருந்தது. இதுதொடர்பாக தனது மகன்களிடம் விசாரித்தபோது 2 வாலிபர்கள் வந்ததை தெரிவித்தனர். அவர்கள் தான் பணத்தை திருடி சென்றிருப்பார்கள் என்று பாலாஜி கருதினார். இதுகுறித்து கோரிமேடு போலீசில் பாலாஜி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.