கொரோனா கட்டுப்பாட்டால் நீலகிரியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 903 ஆக அதிகரிப்பு
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளை அதிகப்படுத்துதல் மற்றும் வாக்குச் சாவடிகளை இடமாற்றுதல் தொடர்பாக அனைத்து கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் 683 வாக்குச்சாவடிகள் இருந்தன. கொரோனா கட்டுப்பாட்டின் காரணத்தினால் ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் புதிதாக 206 துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 14 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 903 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வாக்குச்சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்றும் போது என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் வாக்குச்சாவடிகளை மாற்றி அமைப்பது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக 100 மீட்டருக்குள் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஊட்டி உதவி-கலெக்டர் மோனிகாரானா, குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முகம்மது குதுரதுல்லா (பொறுப்பு), தேர்தல் தனி வட்டாட்சியர் புஷ்பாதேவி உள்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.