செய்திகள்
கொம்பன் யானை (கோப்புப்படம்)

நீலகிரியில் கொம்பன் யானைக்கு நாளை மயக்க ஊசி

Published On 2021-02-06 16:59 IST   |   Update On 2021-02-06 16:59:00 IST
நீலகிரியில் 3 பேரை அடித்துக்கொன்ற ஒற்றை கொம்பன் யானைக்கு நாளை மயக்க ஊசி செலுத்தப்படுகிறது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே 1½ மாதத்துக்கு முன்பு அடுத்தடுத்து 3 பேரை ஒற்றை கொம்பன் யானை அடித்துக்கொன்றது. யானை மோதலில் ஒரு தந்தம் முறிந்ததால் அதற்கு ஒற்றை கொம்பன் என்று களப்பணியாளர்களும், சங்கர் என்று வனத்துறையினரும் பெயரிட்டுள்ளனர்.

3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானையை கும்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்த அப்போதே வனத்துறை முயன்றனர்.யானையை கண்டறிய ட்ரோன் கேமிராக்களும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஒற்றை கொம்பன் யானை மற்ற யானைகளுடன் கலந்து மாயமாகிவிட்டது.

சில நாட்களுக்கு பின்னர் அந்த யானை கேரள மாநிலம் நிலம்பூரில் சுற்றித்திரிவதாக ஆதிவாசி மக்கள் கூறினர். இதனையடுத்து தமிழக- கேரள வனத்துறையினர் இணைந்து ஒற்றை கொம்பன் யானையை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் ஒற்றை கொம்பன் யானை மீண்டும் நீலகிரி மாவட்டம் சேரம்பாடிக்கு திரும்பியது. ஒற்றை கொம்பன் திரும்பயதால் அந்த பகுதி மக்கள் வெளியே வராமல் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதனையடுத்து யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர் 5 கும்கிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அட்டகாசம் செய்யும் யானைகளை பிடிக்கும் பணியில் அனுபவமும், திறமையும் வாய்ந்த உதவிவனப் பாதுகாவலர்கள் தினேஷ், ராஜேஷ் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கோவை மண்டல முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் கூறும்போது, 5 கும்கிகளுடன் காட்டுயானையை பிடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முழுமையான ஆய்வுக்கு பின்னர் நாளை (7-ந்தேதி) மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி நடக்கும். பிடிபட்ட யானை முகாமில் அடைத்து பராமரிக்கப்படும். பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை என்று கூறினார்.

Similar News