செய்திகள்
ராட்சத அலையால் சேதமடைந்த சிமெண்டு சாலை.

மாமல்லபுரம் அருகே கடல் அரிப்பால் சிமெண்டு சாலை சேதம்

Published On 2021-01-30 18:13 IST   |   Update On 2021-01-30 18:13:00 IST
மாமல்லபுரம் அருகே கடல் அரிப்பால் சிமெண்டு சாலை சேதம் அடைந்தது. தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பத்தில் மீனவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் மீன்பிடி தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள சூளேரிக்காட்டு குப்பத்தில் கடற்கரையோரம் செயல்பட்டு வரும் கடல் நீர் குடிநீராக்கும் ஆலைக்கு கடல் நீர் கொண்டு வர ராட்சத குழாய்கள் அமைப்பதற்காக கடலில் 30 மீட்டர் தூரத்திற்கு பெரிய, பெரிய பாறாங்கற்கள் கொட்டப்பட்டன.

அங்கு கடல் அலையின் வேகத்தை குறைக்க கொட்டப்பட்ட கற்களால் பக்கத்தில் உள்ள நெம்மேலி குப்பத்தில் அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்தது. அங்கு கடல் அலையின் வேகம் அதிகரித்து 50 மீட்டர் தூரத்துக்கு கடல் முன்னோக்கி கரைப்பகுதியை நோக்கி வந்துவிட்டதால் அங்குள்ள மணல் பரப்பு முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. 50 மீட்டர் கரைப்பகுதி கடல் நீரால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்த போதிய இடவசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

அங்குள்ள சிமெண்டு சாலை வரை ராட்சத அலை முன்னோக்கி சீறி பாய்ந்து வந்து தாக்கியதால் 100 மீட்டர் நீளமுள்ள சிமெண்டு சாலை சேதம் அடைந்துள்ளது. படகுகள் அங்குள்ள சேதமடைந்த சிமெண்டு சாலை கற்கள் மீது மோதும்போது சேதமடைகின்றன. இதுவரை 10-க்கும் மேற்பட்ட படகுகள் ராட்சத அலையால் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்துள்ளன. நெம்மேலி குப்பத்தின் வடக்கு பக்கத்தில் உள்ள கரைப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு 20 மீட்டர் தூரத்திற்கு மணல் திட்டு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் அங்குள்ள கடற்கரை ஓரம் உள்ள அம்மன் கோவிலும் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நெம்மேலி குப்பம் மீனவர்கள் பலமுறை மீன்வளத்துறைக்கும், தமிழக அரசுக்கும் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் இன்னும் அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக நெம்மேலி குப்பம் கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News