செய்திகள்
திருமலைராயன்பட்டினம் போலகம் பகுதியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது
காரைக்கால் திருமலைராயன்பட்டினம் போலகம் பகுதியில் கஞ்சா விற்ற 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை திருமலைராயன்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்:
காரைக்கால் அருகே திருமலைராயன்பட்டினம் போலகம் பகுதியில் 2 பேர் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருமலைராயன்பட்டினம் போலீசார், அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்த பவித்ரா (வயது 21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் கஞ்சாவை, நாகப்பட்டினத்தை சேர்ந்த தேவேந்திரன் (35) என்பவரிடம் வாங்கி வந்து, காரைக்காலில் விற்றதை ஒப்புகொண்டனர்.
பின்னர் அவர்கள் கூறிய தகவலின் போில் தேவேந்திரனும் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், நாகப்பட்டினம் சிந்தாமணி, வீரையன் ஆகியோரிடம் கஞ்சா வாங்கியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி செந்தமிழ்ச்செல்வன் 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், 3 பேரையும் போலீசார் புதுச்சேரி சிறைச்சாலையில் அடைத்தனர். இதையடுத்து சிந்தாமணி மற்றும் வீரையனை போலீசார் தேடி வருகிறார்கள்.