செய்திகள்
அரியலூர் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கல்லக்குடி:
அரியலூர் மாவட்டம் சாணக்கியாபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 55). விவசாயியான இவர், கல்லக்குடி அருகே கல்லகம் கிராமத்தில் உள்ள அவருடைய வயலுக்கு வந்து விட்டு, மொபட்டில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அரியலூரில் இருந்து பாடாலூருக்கு சரக்கு ஏற்ற சென்ற டிப்பர் லாரி, மொபட் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயபால் உயிரிழந்தார்.
இது குறித்து கல்லகம் கிராம நிர்வாக அதிகாரி லியோடேனியல் கொடுத்த தகவலின்பேரில் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஜெயபால் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் குடவாசல் வட்டம் சர்குணேஸ்வரபுரம் கிராமத்தை சேர்ந்த சாலமனின் மகன் ராபினை(40) கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.