செய்திகள்
பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

ஊத்தங்கரை அருகே மயான பாதை ஆக்கிரமிப்பு: பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2020-12-29 10:50 GMT   |   Update On 2020-12-29 10:50 GMT
ஊத்தங்கரை அருகே மயான பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே உள்ள மாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி கவுண்டர். இவர் உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடைய உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அப்போது மயானத்திற்கு செல்லும் பாதையை தனிநபர்கள் ஆக்கிரமித்ததால் அவர்களால் பிணத்தை கொண்டு செல்ல சிரமம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், ஆக்கிரமிப்பை அகற்றி பாதையை சரி செய்யக்கோரி பிணத்தை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை தாசில்தார் தண்டபாணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் பூமலர் ஜீவானந்தம் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்றி மயானத்திற்கு செல்ல பாதை வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு பிணத்தை மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இறந்தவரின் பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News