செய்திகள்
கோப்புபடம்

ஜெயங்கொண்டம் அருகே, பூட்டை உடைத்து வீட்டில் ரூ.50 ஆயிரம் வெள்ளிப்பொருட்கள், பணம் திருட்டு

Published On 2020-12-25 14:45 IST   |   Update On 2020-12-25 14:45:00 IST
ஜெயங்கொண்டம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அபூர்வம்(வயது 73). இவர் தனது மருமகள் காயத்ரியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். அவரது மருமகள் காயத்ரியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் காயத்ரி வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் உள்ளிட்ட போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகளை சேகரித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்மநபர்கள் உள்ளே புகுந்து குத்துவிளக்கு, 2 கொலுசுகள் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள், ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசில், காயத்ரி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News