செய்திகள்
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள்

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள்

Published On 2020-12-22 16:41 IST   |   Update On 2020-12-22 16:41:00 IST
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக பொதுமக்கள் மனுக்களை அலுவலகத்தின் வெளியே உள்ள பெட்டியில் போட்டு வந்தனர்.

அதன்பின் கடந்த ஒரு மாதமாக காணொலிக் காட்சி மூலம் பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. நேற்று காணொலி காட்சி மூலம் குறைகளை தெரிவிப்பதற்காக ஏராளமான மக்கள் வந்து இருந்தனர்.

அப்போது, அவர்கள் குறைகளை தெரிவிப்பதற்காக கணினி முன்பு சமூக இடைவெளியின்றி வரிசையாக காத்து இருந்தனர்.

மேலும் பலர் முகவசம் அணியவில்லை. தற்போது, இங்கிலாந்து நாட்டில் புதுவிதமான கொரோனா நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியாவிற்கு விமானங்கள் வருவதற்கு வருகிற 31-ந்் தேதி வரை தற்காலிகமாக தடை விதித்துள்ளது இதனை கருத்தில் கொண்டு எதிர்வரும் குறைதீர்க்கும் கூட்டங்களில் பொதுமக்களை ஒருவர் பின் ஒருவராக சமூக இடைவெளி விட்டு நிற்க வைத்து அதன் பின் அவர்களது குறைகளை கேட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 பேர் இறந்து உள்ளனர்.

சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் இந்த எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Similar News