செய்திகள்
தீப்பிடித்து எரிந்த முதல்-அமைச்சர் உருவ பொம்மையை போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்த காட்சி

அ.தி.மு.க.-தி.மு.க.வினர் போட்டி போட்டு உருவ பொம்மைகள் எரித்து போராட்டம் - 65 பேர் கைது

Published On 2020-12-11 20:23 IST   |   Update On 2020-12-11 20:23:00 IST
கூடலூரில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் போட்டி போட்டு உருவ பொம்மைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக நேற்று முன்தினம் அ.தி.மு.க.வினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி.யின் உருவ பொம்மையை பல இடங்களில் எரித்தனர். இதை கண்டித்து கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையிலான தி.மு.க.வினர் நேற்று காலை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இந்த சமயத்தில் போக்குவரத்து சிக்னல் பகுதியில் முதல்-அமைச்சரின் உருவ பொம்மைக்கு தி.மு.க.வினர் தீ வைத்தனர். இதைக்கண்ட போலீசார் உடனடியாக ஓடிச்சென்று உருவ பொம்மையை பிடுங்கி தீயை அணைத்தனர்.

பின்னர் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்.எல்.ஏ. திராவிட மணி, நகர செயலாளர் ராஜேந்திரன் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த நிலையில் கூடலூர் புதிய பஸ் நிலையம் 5 முனை சந்திப்பு பகுதியில் அ.தி.மு.க. நகர செயலாளர் சையத் அனுப்கான் தலைமையிலான அ.தி.மு.க.வினர் திரண்டனர். தொடர்ந்து ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து கோஷங்களை எழுப்பி, அவரது உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசார் ஓடிவந்து எரிந்துகொண்டிருந்த உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். கூடலூரில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் போட்டி போட்டு உருவ பொம்மைகளை எரித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பந்தலூர் பஜாரில் நெல்லியாளம் அ.தி.மு.க. நகர செயலாளர் டி.எல்.எஸ்.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. கருப்புசாமி உள்ளிட்ட பலர் ஆ.ராசாவை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லியாளம் தி.மு.க. நகர செயலாளர் காசிலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊட்டியில் அ.தி.மு.க.வினர் நேற்று முன்தினம் ஆ.ராசா எம்.பி.யின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து ஊட்டி நகர தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏ.டி.சி. திடலில் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகளை விமர்சித்து வரும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

குன்னூரில் சாந்தி ராமு எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆ.ராசா உருவப்பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அவரது உருவ பொம்மையை அ.தி.மு.க.வினரிடம் இருந்து பறித்தனர். ஆ.ராசா உருவ பொம்மையை எரிக்க முயன்றதை கண்டித்தும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்தும் தி.மு.க.வினர் குன்னூர் வி.பி.தெருவில் நகர செயலாளர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News