செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார். இதையடுத்து, பலியானோரின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு, நாள் குறைந்து வருகிறது. இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 62 வயதுடைய மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவர் கடந்த 6-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் அந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மூதாட்டிக்கு கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த மூதாட்டி பலியானார். இவரையும் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அவர்கள் கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 554 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 ஆயிரத்து 278 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 162 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.