செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தி.மு.க. மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

Published On 2020-12-08 03:13 GMT   |   Update On 2020-12-08 03:13 GMT
“தி.மு.க.வினர் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்” என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டி அருகே உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்திற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வந்தார். அங்கு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பிக்கும் போது பல்வேறு சோதனைகளை தாண்டிதான் கட்சியை நடத்தினார். இன்று கோடிக்கணக்கான தொண்டர்கள் அ.தி.மு.க.வில் உள்ளனர்.

கருணாநிதி இறந்த பிறகு அவரையும், அவரது குடும்பத்தினரையும் பற்றி ஒரு போதும் அ.தி.மு.க. தரக்குறைவாக பேசியது கிடையாது. ஆனால் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோர்தான் முதல்-அமைச்சரை பற்றி அவதூறாக பேசி வருகின்றனர்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டு அ.தி.மு.க. தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆதலால் அ.தி. மு.க.வை குறை சொல்ல தி.மு.க. வில் யாருக்கும் தகுதி கிடையாது.

சாத்தூர் சட்டமன்ற தொகுதி உள்பட தமிழ்நாடு முழுவதும் புதிய சாலைகள், அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், கொண்டல் நகர் கூட்டுக்குடிநீர் திட்டம், சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டம், இருக்கன்குடி கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் தடுப்பணைகள் கொண்டுவரப்பட்டு உள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் எவ்வித பணிகளும் செய்யப்படவில்லை. தி.மு.க.வினர் மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.

முதல்-அமைச்சரின் நடவடிக்கையால்தான் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. என்னை போன்ற அமைச்சர்கள் ஏதாவது தவறு செய்தால் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் உடனே கண்டிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News