செய்திகள்
வத்திராயிருப்பு அருகே முழு கொள்ளளவை எட்டிய பெரிய குளம் கண்மாய்
வத்திராயிருப்பு அருகே பெரிய குளம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் வத்திராயிருப்பு அருகே உள்ள பெரியகுளம் கண்மாய் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் வத்திராயிருப்பு பகுதியை சுற்றி உள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த பெரியகுளம் கண்மாய் மூலமாக வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் உள்ள வ.புதுப்பட்டி, அனுப்பன்குளம், மாதவராயன் குளம், பணிக்கர் குளம், வத்திராயிருப்பு வில்வராயன் குளம், சுந்தரபாண்டியம் செங்குளம், குன்னூர் செங்குளம், கோவனேரி கண்மாய், பாத்தனேரி கண்மாய், நத்தம்பட்டி பெரியகுளம் கண்மாய் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது.
வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாய் மூலம் வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 900 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் உள்ள 40 கண்மாய்களில் தற்போது 19 கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மீதமுள்ள 21 கண்மாய்கள் 30 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பி உள்ளது.
வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாய் கடந்த ஆண்டு பெய்த மழையின் மூலம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. பின்னர் போதிய மழை இல்லாததால் சில மாதங்கள் மட்டுமே கண்மாயில் தண்ணீர் இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது. அத்துடன் கண்மாய்க்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் இன்னும் 9 மாதங்களுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் போதுமான அளவு இருப்பு உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
பாசனத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் தற்போது உரமிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.