செய்திகள்
திருபுவனை அருகே தனியார் வங்கி முன் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை
திருபுவனை அருகே தனியார் வங்கி முன் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருபுவனை:
திருபுவனை அருகே மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் வங்கி கட்டிடம் அருகில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சட்டை அணியாமல் குடிபோதையில் சுற்றித்திரிந்தார். திடீரென்று அங்கு கிடந்த கேபிள் டி.வி. வயரை கழுத்தில் மாட்டிக்கொண்டு வங்கி முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருபுவனை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.