செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா - நோய் பாதிப்பு திடீரென அதிகரிப்பு

Published On 2020-12-06 07:57 IST   |   Update On 2020-12-06 07:57:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 983 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 22 ஆயிரத்து 578 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 15 ஆயிரத்து 958 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 15,616 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,805 பேரின் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

115 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தபடவில்லை. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 983 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை 1,318 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 2,800-க்கும் மேற்பட்டவர்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் திடீரென நேற்று நோய் பாதிப்பு 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படாதது தான் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. மாவட்ட சுகாதார துறையினர் தொடர்ந்து நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பற்றிய விவரங்களை தெரிவிக்காததால் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் மாவட்ட சுகாதாரத்துறையினர் நடைமுறையை மாற்றுவதற்கு தயாராக இல்லை.

தற்போது ராஜபாளையம் தென்றல் நகர் பகுதி மட்டுமே நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரமும் இப்பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதா என தெரியாத நிலை உள்ளது.

இனிவரும் நாட்களிலாவது மாவட்ட நிர்வாகம் தொடக்க காலத்தில் இருந்ததை போல நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் விவரங்களை தெரிவித்து அந்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவும், பொது இடங்களில் அரசு அறிவித்துள்ள நோய்தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Similar News