செய்திகள்
சேதமடைந்த நெற்பயிர்களை படத்தில் காணலாம்.

காரியாபட்டி பகுதியில் மழை- நெற்பயிர்கள் சேதம்

Published On 2020-11-28 06:36 GMT   |   Update On 2020-11-28 06:36 GMT
காரியாபட்டி பகுதியில் பெய்த மழையினால் நெற்பயிர்கள் சேதமானது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
காரியாபட்டி:

காரியாபட்டி தாலுகா அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இந்த மழையினால் நெற்பயிர்கள் முழுவதும் சாய்ந்து சேதமானதுடன், தண்ணீரில் மூழ்கியது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

காரியாபட்டி, அல்லாலப்பேரி, வல்லப்பன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நெல் சாகுபடி செய்துள்ளோம். இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த மழைநீர் வயல்களில் தேங்கி நிற்கிறது.

ஆதலால் பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. ஒரு ஏக்கர் விவசாயம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது ரூ.20 ஆயிரம் வரை செலவு ஆகிறது.

இந்த சூழ்நிலையில் தற்போது பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பயிர்கள், வயலில் தண்ணீருக்குள் சாய்ந்து கிடப்பதால் எந்த பலனும் கிடைக்காமல் போய்விடும்.

ஆதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tags:    

Similar News