செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு- கவர்னர் பெருமிதம்

Published On 2020-11-27 08:26 IST   |   Update On 2020-11-27 08:26:00 IST
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நிவர் புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி அரசு துறைகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அவர்களிடம் விவரம் கோரப்பட்டுள்ளது. இதுவரை எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை.

ஆங்காங்கே மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. அதனை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழைநீர் தேங்கியுள்ளதால் சில இடங்களில் மின் இணைப்பு சீராக இல்லை. அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புயலை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதற்காக பாடுபட்ட அனைத்து துறையினருக்கும், அரசின் உத்தரவை ஏற்று நடந்த பொதுமக்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புதுவையில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கும், காவல்துறையினருக்கும் பாராட்டுக்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்பு குறித்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறைக்கு கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Similar News