செய்திகள்
கோப்புபடம்

கருங்கல் அருகே ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை

Published On 2020-10-12 11:46 IST   |   Update On 2020-10-12 11:46:00 IST
கருங்கல் அருகே பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்கல்:

கருங்கல் அருகே கண்ணன்விளை, மேலத்தெருவை சேர்ந்தவர் டைட்டஸ். இவருடைய மனைவி அனீத் (வயது 31). இவர்களுக்கு 2½ வயதில் ஒரு குழந்தை உண்டு. டைட்டஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அனீத் கருங்கல் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் அனீத் தனது குழந்தையுடன் சூசைப்புரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று மதியம் வீட்டின் உரிமையாளர் வாடகை பணம் கேட்டு அனீத்் வீட்டுக்கு சென்றார். அப்போது, கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால், வீட்டின் உரிமையாளர் வெளியே நின்று சத்தம் போட்டு அழைத்தார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த அவர் ஜன்னலை திறந்து பார்த்த போது அனீத் கட்டிலில் அசைவற்ற நிலையில் கிடந்தார். அவரது அருகில் குழந்தை அழுது கொண்டிருந்தது.

இதுகுறித்து உறவினர்களுக்கும், கருங்கல் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அனீத் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News