செய்திகள்
விபத்து

தாரமங்கலம் அருகே மளிகை கடைக்காரர் - மனைவி லாரி மோதி பலி

Published On 2020-09-11 08:09 GMT   |   Update On 2020-09-11 08:09 GMT
தாரமங்கலம் அருகே அடையாளம் தெரியாத லாரி மோதி மளிகை கடைக்காரர் - மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் சக்தி பெட்ரோல் பங்க் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 42). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மல்லிகா (40).

நேற்று வழக்கம்போல் கடை வியாபாரத்தை முடித்த பழனிசாமி தனது மனைவிக்கு ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக் கொடுப்பதற்காக அங்குள்ள பை-பாஸ் சாலையில் உள்ள ஏ.டி.சி. டெப்போ அருகில் சென்றார். பின்னர் அங்கு ஸ்கூட்டர் ஓட்டி பழகிக் கொண்டிருந்தனர்.

இரவு 11 மணியளவில் அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத லாரி அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் உயிருக்கு போராடியபடி சாலையில் கிடந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை 2 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அங்கு ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

பின்னர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை 1 மணியளவில் அடுத்தடுத்து 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதைப்பார்த்த உறவினர்கள் மற்றும் பிள்ளைகள் கதறி துடித்தனர்.

மேலும் விபத்தில் இறந்த 2 பேர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்தும் அங்குள்ள கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News