செய்திகள்
கொரோனா வைரஸ்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு வாலிபர் பலி - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

Published On 2020-06-14 13:04 IST   |   Update On 2020-06-14 13:04:00 IST
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு வாலிபர் பலியானதை தொடர்ந்து தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தை சேர்ந்த 29 வயதுடைய வாலிபர், மும்பையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், கடந்த மாதம் 25-ந் தேதி மும்பையில் இருந்து விழுப்புரத்திற்கு சிறப்பு ரெயிலில் வந்தார். இவர் மட்டுமின்றி, இவருடன் வந்த மற்ற தொழிலாளர்களும் விழுப்புரம் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் பெரியசெவலையை சேர்ந்த தொழிலாளிக்கு 28-ந் தேதி அன்று திடீரென காய்ச்சல், தலைவலி, வாந்தி ஏற்பட்டது. உடனே அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை, உமிழ்நீர் பரிசோதனை எடுக்கப்பட்டது. இதன் முடிவில் அந்த தொழிலாளிக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் பாதுகாப்பாக எடுத்து வந்து விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள தகன மேடையில் எரியூட்டினர்.

இவரை சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Similar News