செய்திகள்
தாக்குதல்

காம்பவுண்டு சுவர் கட்டுவது தொடர்பாக நடந்த தகராறு- 2 பேர் காயம்

Published On 2020-06-10 17:55 IST   |   Update On 2020-06-10 17:55:00 IST
காம்பவுண்டு சுவர் கட்டுவது தொடர்பாக நடந்த தகராறில் 2 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

கிருமாம்பாக்கத்தை அடுத்த பனித்திட்டு கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம மூர்த்தி. இவரது மனைவி மல்லிகா.

இவருக்கும் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கோர்ட்டு உதவியாளரான கணேசன் என்பவருக்கும் காம்பவுண்டு சுவர் கட்டுவது சம்பந்தமாக தகராறு இருந்து வந்தது. தனது இடத்தில் எப்படி சுவர் கட்டலாம் என மல்லிகா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மல்லிகாவுக்கும், கணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை மல்லிகாவின் மருமகனான ஏழுமலை (வயது48) ஆட்டோ டிரைவர் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், ஏழுமலையிடம் தகராறு செய்தார்.

மேலும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கீழே கிடந்த கல்லால் தாக்கினார். இதில் இருவரும் தாக்கி கொண்டதில் ஏழுமலைக்கும் கணேசனுக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கிருமாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் இதுகுறித்து ஏழுமலையும், கணேசனும் தனித்தனியாக கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News