செய்திகள்
கோப்பு படம்

நண்பர்களுடன் கடலில் குளித்த சென்னை என்ஜினீயர் மாணவர் பலி

Published On 2020-05-25 14:49 IST   |   Update On 2020-05-25 14:49:00 IST
மரக்காணம் அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த சென்னை என்ஜினீயர் மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 22). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு அமலில் உள்ளதால் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

அதே பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் முருகவேல் (17). நேற்று மோகன், முருகவேல் மற்றும் அவர்களது நண்பர்கள் 5 பேருடன் மரக்காணம் தீர்த்தவாரி கடல் பகுதியில் குளிக்க சென்றனர். முருகவேல், மோகன் ஆகியோர் கடலின் ஆழப்பகுதிக்கு சென்று குளித்தனர். திடீரென எழுந்த ராட்சத அலை அவர்களை இழுத்து சென்றது. இதில் 2 பேரும் கடலில் மூழ்கினர். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அவர்களின் உதவியுடன் கடலில் இறங்கி 2 பேரையும் தேடினர். ஆனால், கிடைக்கவில்லை.

கடலோர காவல்படையினர் கடலில் மூழ்கிய 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.வெகுநேரமாக தேடியும் அவர்களின் உடல் கிடைக்கவில்லை. இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டது. இன்று காலை தீர்த்தவாரி கடல் பகுதியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரையில் மோகன், முருகவேல் உடல்கள் கரை ஒதுங்கியது.போலீசார் அங்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றினர்.

Similar News