செய்திகள்
மாடம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி
மாடம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர், துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணாயிரம் (வயது50), இவர் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் ராகவேந்திரா நகரில் உள்ள ஒரு மின்கம்பத்தில் ஏறி பழுதை கண்ணாயிரம் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கி கண்ணாயிரம் மின் கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
உடனே சக ஊழியர்கள் கண்ணாயிரத்தை மீட்டு பொத்தேரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உள்ள டாக்டர்கள் கண்ணாயிரத்தை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.