நெல்லித்தோப்பு பெரியார் நகரில் சொத்து தகராறில் மோதல்- 2 பேர் காயம்
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு பெரியார்நகர் வினோபா வீதியை சேர்ந்தவர் எட்டியப்பன் (வயது46). அரசு துறையில் தினக்கூலி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி முனியன் (43). இவர்கள் இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இருதரப்பினரும் மாறிமாறி தாக்கி கொண்டனர். முனியன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த ஆதிகேசவன், தனுஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து எட்டியப்பனை இரும்பு கம்பியால் தாக்கினர். அதுபோல் எட்டியப்பன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த கோகுல், ராஜவேலு ஆகிய 3 பேரும் சேர்ந்து முனியனை தாக்கி பிளேடால் வெட்டினர். மேலும் ஒருவரையொருவர் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துக்கொண்டனர்.
இந்த மோதலில் எட்டியப்பன், முனியன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.