லாஸ்பேட்டை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் காவலாளி மயங்கி விழுந்து மரணம்
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை கீதாநகர் முதல்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி அனுசுயா (வயது34). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் அனுசுயாவின் தந்தை கண்ணன் (74) தங்கி லாஸ்பேட்டை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் மூலம் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கண்ணன் வழக்கம் போல காவல் பணிக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை கண்ணன் காவல் பணியில் இருந்த மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் காயத்துடன் உட்கார்ந்த நிலையில் இறந்து கிடப்பதாக காவல்பணி மேற்பார்வையாளர் புஷ்பராஜ் என்பவர் அனுசுயாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையத்து அனுசுயா சம்பவ இடத்துக்கு சென்று மர்மமான முறையில் இறந்து கிடந்த தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து லாஸ்பேட்டை புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து திடீர் மாரடைப்பால் கண்ணன் இறந்து போனாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.