செய்திகள்
சிறப்பு நகைக்கடன் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன்

கொரோனா சிறப்பு நகைக்கடன் திட்டம் - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

Published On 2020-05-10 20:23 IST   |   Update On 2020-05-10 20:23:00 IST
கொரோனா சிறப்பு நகைக்கடன் திட்டத்தை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்துக்கான கொரோனா சிறப்பு நகைக்கடன் திட்டம் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர்.ராஜா என்கிற கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு 20 பேருக்கு ரூ.7 லட்சத்து 35 ஆயிரத்து 900 நகைக்கடனை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா நோய் பரவல் காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து உள்ளதால், மக்களின் நலன் கருதி அவசர தேவையை நிறைவேற்றும் வகையில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் கொரோனா சிறப்பு நகைக்கடன் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரமும், கிராமுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 6 சதவீத வட்டி வீதத்தில் 3 மாத தவணை காலத்துக்கு வழங்கப்படுகிறது. மேலும், ரூ.2 லட்சம் வரை காப்பீடு வசதியும் இலவசமாக வழங்கப்படும்.

பள்ளிக்கூடங்கள் எப்போது திறப்பது என்பது குறித்து, முதல்-அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழு முடிவு செய்து அறிவிக்கும். தனியார் பள்ளிக்கூடங்களில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25 சதவீத மாணவர்கள் சேர்க்கைக்காக ரூ.218 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிக்கூடங்களில், கல்வி கட்டணத்தை செலுத்தக்கூறி கட்டாயப்படுத்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News