செய்திகள்
முதியோர் உதவித்தொகை வாங்குவதற்காக தரையில் அமர்ந்திருந்த முதியோர்களை படத்தில் காணலாம்.

முதியோர் உதவித்தொகை வாங்க வங்கி வாசல்களில் காத்திருந்த மூதாட்டிகள்

Published On 2020-05-09 18:01 IST   |   Update On 2020-05-09 18:01:00 IST
முதியோர் உதவித்தொகை வாங்க வங்கி வாசல்களில் மூதாட்டிகள் காத்திருந்தனர்.
ஈரோடு:

தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை வங்கிகள் மூலம் அவர்களுக்கு வழங்கப்படும். வழக்கமாக மாத தொடக்கத்தில் சம்பந்தப்பட்ட முதியோர் வங்கிகளுக்கு வந்து பணத்தை எடுத்துச்செல்வார்கள். அரசு சார்பில் பணம் செலுத்த தாமதம் ஆனால் 2 அல்லது 3 முறை முதியோர்கள் வங்கிகளுக்கு வந்து தங்கள் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு இருக்கிறதா? என்று கேட்டு தெரிந்து அதன் பின்னர் பணம் எடுத்துச்செல்வார்கள்.

தற்போது ஊரடங்கு காலத்திலும் முதியோர்கள் வங்கிகளுக்கு வந்து தங்கள் கணக்கில் பணம் உள்ளதா என்று பார்த்து எடுத்துச்செல்கிறார்கள். மேலும் கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் வங்கிகளுக்குள் அதிகம் பேர் அனுமதிக்கப்படுவதில்லை. வங்கி வாடிக்கையாளர்கள் யாராக இருந்தாலும் இடைவெளி விட்டு வெளியே காத்திருக்க வேண்டும். இதற்காக பலரும் வங்கி திறப்பதற்கு முன்னதாகவே வந்து வரிசையில் காத்திருக்கிறார்கள்.

இவ்வாறு நேற்று ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் முதியோர் உதவித்தொகை பணம் எடுப்பதற்காக ஏராளமான முதியோர்கள் வந்திருந்தார்கள். அதில் சில மூதாட்டிகள் காலை 8 மணிக்கே வந்து வங்கியின் அருகே உள்ள கடைகளின் ஓரங்களில் காத்து இருந்தனர்.

தற்போது வங்கி கணக்கில் உள்ள பணத்தை தபால்க்காரர் மூலம் வீடுகளில் இருந்தே எடுக்கும் வசதி அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கான வீடுகளுக்கு தபால்துறை மூலம் பணத்தை வினியோகம் செய்தால், கொரோனா தொற்று, கடும் வெயில் இவற்றில் இருந்து முதியவர்களை பாதுகாக்க முடியும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கேட்டுக்கொண்டார்.

Similar News