செய்திகள்
ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்துக்கு மாறியது எப்படி?

Published On 2020-05-06 15:22 IST   |   Update On 2020-05-06 15:22:00 IST
கடந்த 21 நாட்களாக புதிதாக தொற்று எதுவும் இல்லாததால் தற்போது ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்திற்கு மாறி உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்திறகு தாய்லாந்து நாட்டில் இருந்து மத பிரசாரத்துக்கு வந்த 3 பேருக்கு முதன் முதலில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் மூலம் கொரோனா மேலும் பரவ தொடங்கியது. பெண் டாக்டர் உள்பட 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் ஒரு முதியவர் இறந்து விட்டார்.

கொரோனா பாதிப்பில் ஈரோடு மாவட்டம் முதன் முதலாக ரெட் அலார்ட் நிலைக்கு சென்றது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் இறங்கியது. கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்து 63 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஈரோடு பெரிய மார்க்கெட் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 2 இடங்களில் இயங்கி வந்த உழவர் சந்தை ஒரே இடத்திற்கு மாற்றப்பட்டது. கோபி, சத்தி உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்த மார்க்கெட் பஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து சென்றதை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியது.

கடந்த 21 நாட்களாக புதிதாக தொற்று எதுவும் இல்லாததால் தற்போது ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்திற்கு மாறி உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களே காரணம்.

Similar News