செய்திகள்
வழக்கு பதிவு

ஊரடங்கு உத்தரவு மீறி செயல்பட்ட சந்தை வியாபாரிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2020-05-05 14:47 IST   |   Update On 2020-05-05 14:47:00 IST
பெருந்துறையை அடுத்துள்ள பட்டக்காரன் பாளையத்தில் ஊரடங்கு உத்தரவு மீறி செயல்பட்ட சந்தை வியாபாரிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள பட்டக்காரன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு ஆயிக்கவுண்டன் பாளையம் மற்றும் பட்டக்காரன் பாளையம் பகுதியில் உள்ள ஆலமரத்தடியில் வாரம் தோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மளிகை, காய்கறி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

தற்போது கடந்த 6 வாரங்களாக ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் சந்தை செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிழக்கு ஆயிக்கவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள வாரச்சந்தை வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தடையை மீறி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் ஊடங்கு உத்தரவை மீறி கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்த வியாபாரிகள் முககவசம் அணியாமலும், போதிய சமூக இடைவெளியின்றியும் வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அந்த கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தி கடைகள் அமைத்திருந்த 15 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News