அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரிகளை திருப்பி அனுப்பிய போலீசார்
அம்மாபேட்டை:
ஊரடங்கு தொடர்ந்து அமுலில் உள்ள நிலையில் அம்மாபேட்டை அருகே கோனேரிப்பட்டி கதவனை போலீஸ் சோதனை சாவடி ஈரோடு - சேலம் மாவட்ட எல்லை என்பதால் அத்தியாவசிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்களை அனுமதிப்பது இல்லை.
இந்நிலையில் அந்த வழியாக வந்த 4 டிப்பர் லாரியில் அரசு பணிக்காக என ஸ்டிக்கர் ஒட்டிகொண்டு எம் சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அம்மாபேட்டை அருகே உள்ள கருங்கரடு பகுதியில் இருந்து ஒரு கல் குவாரியில் எம் சாண்ட் மணல் ஏற்றி கொண்டு எடப்பாடி பகுதியில் கட்டுமான பணிக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
மேலும் சேலம் மாவட்டத்தில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அனுமதி கடிதத்தை வைத்து கொண்டு ஈரோடு மாவட்டத்தில் வாகனம் இயங்குவதால் அதற்கான அனுமதி கடிதம் பெற்று வரவேண்டும் எனவும், மேலும் புறப்படும் இடம் சேரும் இடத்திற்கான அனுமதிச்சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என எச்சரித்து அனுப்பினர்.
இது போல் சில வாகனங்களில் சம்பந்த மில்லாமல் அரசு பணிக்காக என ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர். அவர்களையும் போலீசார் விசாரித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.