செய்திகள்
அம்மாப்பேட்டை அருகே சமூக இடைவெளியுடன் நடந்த பேராசிரியை திருமணம்
அம்மாப்பேட்டை அருகே சமூக இடைவெளியுடன் பேராசிரியை திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன் வீட்டினர் 10 பேரும், மணமகள் வீட்டினர் 10 பேரும் என மொத்தம் 20 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
அம்மாப்பேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள நெருஞ்சிப்பேட்டையை சேர்ந்தவர் அரவிந்த் (29). பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை சுபாஷினிக்கும் (25) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் திருமணத்தை எளிய முறையில் நடத்த முடிவு செய்தனர். அதன் படி நெருஞ்சிப் பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அரவிந்த்- சுபாஷினி திருமணம் நடைபெற்றது.
இதில் மணமகன் வீட்டினர் 10 பேரும், மணமகள் வீட்டினர் 10 பேரும் என மொத்தம் 20 பேர் மட்டுமே பங்கேற்றனர்.மணமக்கள் மற்றும் உறவினர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடை பிடித்தனர்.