செய்திகள்
கொள்ளை

புதுவையில் மீண்டும் குடோனின் பூட்டை உடைத்து மதுபானங்கள் கொள்ளை

Published On 2020-04-23 13:38 IST   |   Update On 2020-04-23 13:38:00 IST
புதுவையில் மீண்டும் குடோனின் பூட்டை உடைத்து மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை கதிர்காமம் பாரதி வீதியை சேர்ந்தவர் பூபதி (வயது65). இவர் மதுப்பான கடை நடத்தி வருகிறார். இந்த மதுபான கடைக்கு தேவையான மதுபானங்களை புதுவை சித்தன்குடி 2-வது குறுக்கு தெருவில் ஒரு குடோனில் வைத்திருந்தார்.

இதற்கிடையே மதுக்கடை உரிமையாளர்கள் மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பதாக வந்த புகாரை அடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூபதிக்கு சொந்தமான மது குடோனுக்கு தாசில்தார் சீல் வைத்தனர். மது குடோனுக்கு முன் பக்க கதவுக்கு சீல் வைத்த அதிகாரிகள் குடோனின் பின்பக்க கதவுக்கு சீல் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு அந்த மதுபான குடோனின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து அங்கு வைத்திருந்த மதுபானங்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பூபதி கோரிமேடு போலீசாருக்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து கோரிமேடு போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் குடோனின் ஒரு பக்க கதவுக்கு சீல் வைத்த கலால் அதிகாரிகள் மறுபக்க கதவு பூட்டுக்கு சீல் வைக்காதது ஏன்? என்ற சந்தேகம் அப்பகுதி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போன்று புதுவை மறைமலை அடிகள் சாலையில் மதுக்கடையின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News