செய்திகள்
100 நாள் வேலை திட்டம்

புதுவையில் 100 நாள் வேலை திட்டம் தொடங்கியது

Published On 2020-04-20 16:24 IST   |   Update On 2020-04-20 16:24:00 IST
மத்திய அரசு வழிகாட்டுதலின்படி புதுவையில் இன்று முதல் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
புதுச்சேரி:

தேசிய ஊரடங்கால் வேலையின்றி புதுவை கிராமப்புற மக்கள் தவித்து வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு 20-ந் தேதி முதல் கட்டுமான தொழில், தொழிற்சாலைகள் உள்ளிட்ட சில தொழிலுக்கு தளர்வு அளித்தது.

இதேபோல மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்திற்கும் தளர்வு அளித்தது.

இதனை தொடர்ந்து இன்று 100 நாள் வேலை திட்ட பணிகள் புதுவையில் தொடங்கியது. இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரவிபிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு வழிகாட்டுதலின்படி புதுவையில் இன்று முதல் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

அரியாங்குப்பத்தில் 20 பணிகளும், வில்லியனூரில் 13 பணிகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியிலும் சராசரியாக 200 தொழிலாளர்கள் பணிபுரிவர்.

இத்திட்டத்தின் கீழ் இன்று 10 ஆயிரம் தொழிலாளர்கள் பணியை தொடங்கியுள்ளனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் முக கவசம் அளிக்கப்பட்டது. கை கழுவ சானிடைசர் வசதியும் செய்துள்ளோம்.

வேலை நேரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்கனவே பயிற்சி தரப்பட்டிருந்தது. வேலைக்கு வருபவர்கள் கும்பலாக வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தொழிலாளர்களின் பணி அடையாள அட்டை, ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை அளித்து பணிகளை தொடங்கினர். அடுத்தவாரம் முதல் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

தற்போது ஏற்கனவே செய்யப்பட்டு வந்த பணிகளை செய்து வருகிறோம். அடுத்த வாரம் புதிய பணிகளை தொடங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News