செய்திகள்
கைது

தவளக்குப்பத்தில் வெளிநாட்டு மதுபானம் விற்ற 2 பேர் கைது

Published On 2020-04-20 15:23 IST   |   Update On 2020-04-20 15:23:00 IST
தவளக்குப்பத்தில் வெளிநாட்டு மதுபானம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:

புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால் மதுப்பான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதனை பயன்படுத்தி பலர் மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருகின்றனர். உள்நாட்டு நாட்டு மதுபானங்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்ட நிலையில் வெளிநாட்டு மதுபானங்களை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க வசதி படைத்தவர்கள் பலர் தயாராக உள்ளனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒருசிலர் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் ஏஜென்சியிடம் இருந்து வெளிநாட்டு மதுப்பானங்களை மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இதுபோல் தவளக்குப்பம் பகுதியிலும் வெளிநாட்டு மதுப்பானம் விற்கப்படுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் உத்தரவின் பேரில் போலீசார் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அதுபோல் நேற்று மாலை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 3 பேர் தங்களை போலீசார் கண்காணிப்பதை அறிந்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றவர் 2 பேர் சிக்கினர்.

அப்போது அவர்களது மோட்டார் சைக்கிளின் பெட்டியை திறந்து சோதனை நடத்திய போது அதில் வெளிநாட்டு மதுப்பானங்கள் இருந்தன. மிக விலை உயர்ந்த 8 மதுப் பாட்டில்கள் அதில் இருந்தது. இதில் பிடிப்பட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ரெட்டிச் சாவடியை சேர்ந்த தினேஷ் (வயது24), மற்றொருவர் ரெட்டிச் சாவடியை அடுத்த மதலப்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் (24) என்பது தெரியவந்தது. இவர்கள் வெளிநாட்டு மதுப் பானங்களை வசதிப் படைத்தவர்களுக்கு ஏற்றார் போல் அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிகள், வெளி நாட்டு மதுப்பானங்களை கைப்பற்றினர். மேலும் தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

இதேபோல் பாகூரில் முன்னாள் கொம்யூன் பஞ்சாயத்து துணை சேர்மனும், சாராயக் கடை உரிமையாளருமான தவமுருகன் என்பவர் தனது சாராயக்கடை ஊழியர்கள் மூலம் சாராயம் விற்று வந்ததாக வந்த புகாரை அடுத்து பாகூர் போலீசார் தவமுருகனை நேற்று கைது செய்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் சம்பவ இடத்துக்கு சென்று ஊரடங்கு அமலில் உள்ளதால் கள்ளத்தனமாக மதுபானம் விற்றது சட்ட விரோதம் எனக்கூறி பொதுமக்களை சமாதானம் செய்தனர்.

Similar News