செய்திகள்
தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை- புதுவை அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை காலத்தின் போது தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசின் தொழிலாளர் துறை ஆணையாளர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசின் உத்தரவினால் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை காலத்தை பணிக்காலமாக கருதி அவர்களுக்கு முழு சம்பளம் வழங்கிட அனைத்து தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலன் காக்கும் பொருட்டு அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்படுத்தி தர தொழில் முனைவோருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் எந்த சூழ்நிலையிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய தங்குமிடத்தில் இருந்து வெளியேற அனுமதி கிடையாது. அவர்களுக்கு உடல்நலம் மற்றும் உடலில் பிரச்சனை ஏற்பட்டால் நிர்வாகத்தினர் உடனடியாக மாவட்ட கலெக்டரை அணுகி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.